NFTECHQ

Friday, 25 September 2015

மோடி உதிர்க்கும் முத்துக்கள்

மாற்றம் நிகழும்-அது மிக இயல்பாகமழை பொழிவதுபோல!
அவர் உலக நாயகன் என்பதில் சந்தேகமில்லை. பிறந்த நாட்டில் இருக்கும்போது, அவர் மூடின முத்து - அதாவது தேர்தல் பிரச்சார மேடையில் நிற்காத நேரத்தில். மூடிய அறைக்குள் அமர்ந்து மன் கீ பாத்சொற்பொழிவை ஒலிப்பதிவு செய்யாத நேரத்தில்மக்கள் மன்றத்தில் என்னதான் அமளி நடக்கட்டுமே - முக்கியத் துறையின் அமைச்சர் பற்றி சர்ச்சை எழட்டுமே, மாநில பாஜக அரசுகளின் ஊழல்களைப் பற்றி புகார்கள் வெடிக்கட்டுமே - ஊஹும் அதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாததுபோல கண்ணுக்குத் தெரியாமல் போவார். அவரது அமைச்சரவையில் உள்ள சில பல உருப்படிகள் சகட்டுமேனிக்குச் சிறுபான்மையினரை அவமதிக்கும் வகையில் அவதூறு பேசி உளறட்டுமே - அவர் தாமரை மேல் ஒட்டாத நீர் - பத்மபத்ர ந வாம்பஸாபல்கலைக்கழக உயர் நியமனங்கள், புனே பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் அமர்த்தப்பட்ட தகுதியற்ற தலைவர் பற்றிய விவகாரம், அதை எதிர்க்கும் மாணவர்களின் போராட்டம்... நாடு முழுவதும் அறிஞர்கள் தெரிவிக்கும் விமர்சனங்கள் - எதுவும் அவரது செவியில் விழாது. அவர் எட்டாத உயரத்தில் இருப்பவர். தந்தக் கோபுரத்தில். அங்கிருந்து அவரது பார்வைக்குக் காலடி மண் தெரிய வாய்ப்பில்லை. அவரது பார்வையில் படுவது அகன்று விரிந்த கடல் பரப்பு. பாற்கடல். அதில் மையமாக அவர் - சயனித்திருக்கும்
மோடி மந்திரம்
அயல்நாட்டுப் பயணங்கள் சிலிர்ப்பூட்டும் விஷயங்கள். பாதுகாப்பு உணர்வைத் தருபவை. நியூயார்க் பார்த்திருக் கிறீர்களா? மாடிசன் ஸ்க்வேர் கார்டன்? அடேயப்பா, அங்கே வந்திருந்த மாபெரும் கூட்டத்தில், அமெரிக்கவாழ் இந்தியர்கள் லட்சக்கணக்கில் கூடி மோடிமோடி!என்று கைத்தட்டி நிறுத்தாமல் கோஷமிட்டபோது கண்களில் நீர் நிறைந்தது. பெருமிதத்தில் மார்பு இன்னும் விரிந்து நிமிர்ந்து நின்றது. அதையும் மிஞ்சப் பார்த்த ஷாங்காய் நகரக் கூட்டத்துக்கு சீனாவின் மூலைமுடுக்குகளில் இருந்தெல்லாம் அங்கு வாழும் இந்தியர்கள் வந்தார்களே? இதற்கு முன் யாருக்கு அத்தகைய வரவேற்பு கிடைத்திருக்கும்? ‘‘கனவுகூடக் காண முடியாத பின்புலத்திலிருந்து வந்தவன் நான், உங்கள் முன் நிற்கிறேன்’’ என்றபோது கூட்டம் எப்படி ஆர்ப்பரித்தது! ஓ, மறந்துவிட்டது. ஆஸ்திரேலியப் பயணத்தில், சிட்னி அல்போன்ஸ் அரீனாவில் எப்படிப்பட்ட அரங்க ஏற்பாடு! மத்தளமும் சங்கும் முழங்க வரவேற்பு. கடல்போலக் கண்முன் விரிந்த ஜனத்திரள். ஆஹா, அந்த ஆனந்த உணர்வை அனுபவத்தில்தான் அறிய முடியும். இப்போது வேறு திசையிலும் திணறடிக்கும் வரவேற்பு. துபாயின் பிரபல கிரிக்கெட் மைதானத்தில் 50,000 பேர் கூடியிருந்தார்கள். மோடிமோடி!என்று மந்திரம்போல் இசைத்தார்கள். இந்தியில் பேசப்பேச ஒவ்வொரு வரிக்கும் ஆர்ப்பரித்தார்கள்.
மோடியின் அபய ஹஸ்தம்
வெளிநாடுகளில், அங்கு வாழும் இந்தியர்களின் கூட்டத்தில் பேசுவது வெகு சுலபம். சவுகரியமாக வாழும் என்.ஆர்.ஐ. கூட்டத்தின் உற்சாக ஆர்ப்பரிப்பு போதையைத் தரும். தடுமாற வைக்கும். அவருக்காக வந்த கூட்டமல்லவா? அலங்கார வார்த்தைகளுக்குப் பஞ்சமில்லை. ‘‘வள்ளல் பெருமக்களான உங்களது உபயத்தால்தான் இந்திய நாட்டின் பொருளாதாரம் தடம்புரளாமல் இருக்கிறது’’ என்ற வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை.
‘‘இத்தனை ஆண்டுகள் இந்தியா இருண்டிருந்தது. ஊழல் கறை படிந்திருந்தது. நீங்கள் அதை நினைத்து வெட்கப்பட்டீர்கள். இனி நீங்கள் தலை நிமிரலாம். உங்கள் பிறந்த மண்ணின் வாசல் திறந்திருக்கிறது உங்கள் வளங்களை அங்கு கொட்டுங்கள். பயப்படாமல் வர்த்தகம் செய்யுங்கள்…’’
மோடி என்ற மகத்தான தனி மனிதரின் அபய ஹஸ்தம் உங்களைக் காக்கும் என்கிற சேதி வார்த்தைகளால் சொல்லப்படாமல் அவர்களைப் பரவசப்படுத்தும். அவர்களால் புரிந்து கொள்ள முடிந்த ஹிந்துஸ்தானி மொழி. இந்திய மொழி செவியில் விழும்போது நாடி நரம்பெல்லாம் உசுப்பிவிடுவதுபோல் இருக்கிறது. நல்ல வேளை புரியாத மொழி பேசும் அறிவுஜீவி இல்லை அவர். அறிவுஜீவிகளுடன், கலைஞர்களுடன் அவருக்குத் தொடர்பு இல்லை. வார்த்தைகளால் பின்னல் பின்னித் தோரணம் கட்டுகிறார். எத்தகைய கனவுகளை விரிக்கிறார்? அவருடைய உடையைப் பார்த்தீர்களோ? எத்தனை நேர்த்தி! ஒவ்வொரு நாட்டுக் கூட்டத்துக்கும் அதற்கு ஏற்ற உடை. அதற்குப் பொருத்தமாக அங்கவஸ்திரம். இத்தனை ஸ்மார்ட்டாக எத்தனை இந்தியப் பிரதமர்களைப் பார்த்திருக்கிறீர்கள்?
என் பலம் தெரியாது
அவருக்குத் தெரியும், இந்த லாகிரி சொற்ப நேரம்தான் நிலைக்கும். இதுவரை நீங்கள் மேற்கொண்ட பயணங்களால் நாட்டுக்கு என்ன லாபம் கிடைத்தது என்று பொருளாதார நிபுணர்கள் கேட்பார்கள். கேட்கட்டும்; விவாதத்துக்கு அவர் தயாரில்லை. அவருக்குப் பேசித்தான் பழக்கம். கேட்டுப் பழக்கமில்லை. கேட்க வேண்டிய அவசியமில்லை. எதிர்பாராத அளவு தேசம் தழுவிய வெற்றியைக் கட்சிக்குத் தனது பேச்சுத் திறமையால், பிரச்சாரத் திறமையால் கிடைக்கவைத்து ஆட்சியில் அமர்த்தியாகிவிட்டது. இன்னும் நான்கு ஆண்டுகள் அவரை அசைக்க முடியாது. பேசுபவர் பேசட்டும். வேலையற்றவர்கள். தோற்றுப்போனவர்கள். பொது மேடையில் அவர்களை நார் நாராகக் கிழித்துப் போடுவது சிரமமில்லை. மக்கள் அவரது ஒவ்வொரு வார்த்தையையும் நம்புவார்கள். வாக்குகளை அப்படித்தான் அள்ள முடியும். நாடாளுமன்றத்தில் விவாதிப்பதால் அல்ல.
அந்தப் பொடியன் என்ன சொன்னான்? நாடாளு மன்றத்துக்கு வந்து கேள்விகளைச் சந்திக்க மோடிக்குத் தைரியமில்லை என்றான். என் பலம் அவனுக்குத் தெரியாது. பல திறமையான இளம் தலைவர்கள் கொண்ட பழமையான கட்சி அவனை நம்பித் தொங்கிக் கொண்டிருக்கிறது. நமது அதிர்ஷ்டம் அது. வெற்றுக் காற்று. என் சகாக்களே அவனை ஊதி வெளியேற்றுவார்கள்.
அது சரி... விமானத்திலிருந்து தரையிறங்கிவிட்டீர்களா? இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள்? எப்படி நிறைவேற்றப்போகிறீர்கள்?
நீங்கள் மேடையில் பேசும் பேச்சுக்கள், மன் கீ பாத் பிரசங்கங்கள் யாவும் நடைமுறைப் பிரச்சினைகளைத் தொடுவதில்லையே? ஏன்? வானத்தை வில்லாய் வளைப்பேன் என்கிறீர்கள். எப்படி? என்னதான் உங்கள் திட்டம்? அல்லது எண்ணம்? யாருக்கும் தெரியாது. வருஷத்துக்கு ஒரு முறை நீங்கள் செங்கோட்டையில் நின்று முழங்கும் சுதந்திர தினப் பேச்சுக்குக் காத்திருக்க வேண்டுமா?
பீதியளிக்கும் அலட்சியம்
உங்கள் உடல்மொழி தெரிவிக்கும் சமிக்ஞை ஆபத்தானது. நார்சிஸ (சுயமோகம்) எல்லையைத் தொடுவது. எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் அரசு இல்லை என்கிற மிதப்பு , உங்கள் மவுனம் வெளிப்படுத்தும் அலட்சியம் பீதியளிக்கிறது. இந்தப் பயம் என்னுடைய பிரத்தியேக உணர்வு இல்லை. கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல், அறிவுக்கூடங்களில் நுழைந்திருக்கும் அடிப்படைவாதம், அமைச்சர்களின் தன்னிச்சையான பிடிவாதங்கள், எதிர்ப்பை அமுக்கும் மூர்க்கம், எல்லாவற்றையும் அங்கீகரிக்கும் உங்கள் மவுனம் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. மக்கள் கவனிப்பார்கள். இன்றில்லாவிட்டால் நாளை. அவர்கள் வெறும் வாக்கு எண்கள் அல்ல. உயிர்த் துடிப்புள்ள, எதிர்பார்ப்புகள் நிறைந்த ஜீவன்கள். அவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதை உலக வரலாறு சொல்லும்.
ஜான் ஸ்டீன்பெக் எழுதிய கிரேப்ஸ் ஆஃப் ராத்என்ற நாவலில் கேஸி என்ற ஒரு கதாபாத்திரம் ஏமாற்றமும் விரக்தியும் மிகுந்த காலகட்டத்தில் சொல்லும், ‘அது நிகழும். மக்கள் ஒன்றாகச் சிந்தித்து எழும் காலம் வரும், மாற்றம் விளைவிக்க. அது மிக இயல்பாக நிகழும். மழை பொழிவதுபோல!
நான்கு ஆண்டுகளில் அது நிகழலாம் - மிக இயல்பாக - மழை பொழிவதுபோல.
- வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்,
mily:Latha; color:#3B3A39'>எழுத்தாளர்,
சிறக்கட்டும்
குடந்தை மாவட்ட மாநாடு 22.09.2015 அன்று நடைபெற்றது.
புதிய மாவட்டச் சங்க நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்.
இளைய தோழர் மாவட்டச் செயலர் தோழர் விஜய் அவர்களின் செயல்பாடு சிறக்கட்டும் என வாழ்த்துகிறோம்.
ஈகைத் திருநாள்
சமத்துவம் சகோதரத்துவம் இவற்றைப் போத்திக்கும் ஈகைத்திருநாளிள் வாழ்த்துக்கள்

Saturday, 19 September 2015

செப்டம்பர் 19
மத்திய அரசு ஊழியர்கள் தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம், பஞ்சபடியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்தல் , பஞ்சப்படி வழங்குவதற்கான விதிமுறைகளை  முதலிய  9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 1968 செப்டம்பர் 19 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர்.
அரசு கடுமையான அடக்குமுறைகளை ஏவியது. துப்பாக்கி சூட்டில் 9 தோழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். பத்தயிரத்துக்கும்   மேற்பட்டோர் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டனர்.   3,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 8,000 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சேவை முறிவு தொலைதூர இட மாற்றம் , பதவி இறக்கம் முதலான நடவடிக்கைகள் தொடர்ந்தன.


இத்தகைய தியாகங்களால்தான் இன்று நாம் பல உரிமைகளை அனுபவித்து வருகிறோம். செப்டம்பர் -19- தியாகிகளுக்கு வீர வணக்கம் 

JTO ஆளெடுப்பு விதி மாற்றம்

JTO இலாக்கா தேர்வு எழுத  7 ஆண்டு தகுதி  என்பது ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

தற்காலிக  JTO ஆக பணியாற்றுவோரை நிரந்தர JTO ஆக பணியமர்த்தவும் ஒப்புதல்
அளிக்கப்பட்டுள்ளது

நமது மத்திய சங்கத்தின் முயற்சிக்கு  பாராட்டுக்கள்.

நமது மத்திய சங்கத்துடன் இப்பிரஸ்னையில் இணைந்து செயல்பட்ட SNATTA  மத்திய சங்க்கத்துக்கும் பாராட்டுக்கள்

Friday, 18 September 2015

அந்நிய முதலீட்டால் யாருக்கு லாபம்?



அந்நிய முதலீடு பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கே வித்திட்டிருக்கிறது
எங்கு நோக்கினும் வளர்ச்சி முழக்கங்கள். அந்நிய முதலீடுஅந்நிய முதலீடுஎனும் கோஷங்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் உண்மையிலேயே உதவி செய்கின்றனவா?
கடந்த 10 ஆண்டுகளில் உற்பத்தித் துறையின் நிகர மூலதன உருவாக்கத்தில் அந்நிய நேரடி முதலீட்டின் பங்களிப்பு வெறும் 10% அளவில்தான் இருக்கின்றன என்பதை இந்திய ரிசர்வ் வங்கி அளிக்கிற தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன. நிகர மூலதன உருவாக்கத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்களே பெரும் பங்களிப்பை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களை உள்ளே அனுமதிப்பதால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்தே வெளியேறிவிடக்கூடிய நிலைமை உருவாகும் என்ற எச்சரிக்கை உணர்வு அரசுக்கு இருப்பதாகவே தெரியவில்லை.
லாபம்தான் குறிக்கோள்!
எந்தவொரு முதலீடும் லாபத்தை முன்னிட்டே. அதுவும் அந்நிய முதலீடு என்னும்போது சந்தேகத்துக்குச் சிறிதும் இடமின்றி அது மிகைலாபம் குவிக்கும் திட்டமே. அதிலும் அந்நிய நேரடி முதலீடு என்பது இட்ட முதலீட்டைத் திரும்பப் பெறுவதில் நீண்ட கால நடைமுறைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அதனால், முதலீடு செய்யும் நாடுகள் முதலீடு செய்வதிலுள்ள நடைமுறை களை எளிமைப்படுத்துவதில் தொடங்கி, தொழில் சச்சரவு களுக்கு மாற்றுத் தீர்வழிகளை உருவாக்குவதுவரை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமது முதலீட்டின் உறுதியான பாதுகாப்புக்கு முயற்சிகளை மேற்கொள் கின்றன. முதலீடு செய்யப்படும் நாடுகளும் அதை மறுப்பின்றி ஏற்றுக்கொண்டாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக் கல்ல. ஆனால், தமது பொருளாதாரம் மிக நூதனமான முறையில் சுரண்டப்படுகிறது என்பதை அறிந்ததைப் போலவே இந்திய அரசு காட்டிக்கொள்வதில்லை. மாறாக, முதலீட்டின் அளவு அதிகரிப்பதைத் தமது சாதனையாக முன்னிறுத்துகிறது.
1990-களுக்குப் பிறகு, அந்நிய முதலீட்டுக்கு இசைவாக இந்தியாவில் பல்வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
1999-ல் கம்பெனிகள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, கம்பெனிகளுக்கு இடையேயான கடன்கள் மற்றும் முதலீடுகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. தொழில் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளின்படி, வெளிநாட்டு முதலீட்டாளர் தமது உள்ளூர் கூட்டாளிகளின் துணைகொண்டு கம்பெனி நடவடிக்கைகளில் வெட்டு அதிகாரத்தைப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம் - சட்ட விரோதம்!
இருவேறு நிறுவனங்களுக்கு இடையே எழும் வழக்குத் தகராறுகள் நீதிமன்றத்துக்குச் சென்று கால தாமதத்தை ஏற்படுத்துவதைத் தவிர்த்திட, இசைவுத் தீர்ப்பாயம் மற்றும் சமரச முறைகளை மாற்றீடாக அரசே பரிந்துரைக்கிறது. இவற்றோடு தொழிலாளர்களிடம் இருந்த ஒரே ஆயுதமான வேலைநிறுத்தம் செய்யும் உரிமை யும் சட்ட விரோதமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைமுறை யிலுள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குப் பொருந்தாது. ஆனாலும் கூட, இவை எல்லாம் போதாது, இன்னும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று தாராளமயத்தை ஆதரிக்கும் சர்வதேசப் பொருளாதாரப் பத்திரிகைகள் ஆலோசனைகளை அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கின்றன.
அண்டை நாடான சீனா, உலகளவிலான அந்நிய நேரடி முதலீட்டில் 10%-ஐப் பெற்றிருந்தாலும், இந்தியா அளவுக்குப் படுமோசமான சமரசங்களைச் செய்துகொள்ள வில்லை. அந்நாட்டின் வலுவான உட்கட்டமைப்பு வசதிகள், சந்தைப் பரவலாக்கம், எளிதில் கிடைக்கும் உழைப்புச் சக்தி ஆகியவற்றின் காரணமாக ஈர்க்கப்பட்டே வெளிநாடுகள் சீனாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன. ஆனால், இந்தியா உள்ளிட்ட மற்ற எல்லா நாடுகளிலும் ஏறக்குறைய ஒரே நிலைதான். மிகக்குறைவான ஊதியத்தில் தொழிலாளர்களை அமர்த்திக்கொள்வதன் மூலம் முதலீட்டு நிறுவனங்கள் தமது உற்பத்திச் செலவைப் பெருமளவு குறைத்துவிடுகின்றன. அதைப்போலவே அந்நிய முதலீடு செய்யப்படும் நாடுகளில் மட்டுமின்றி, அந்நாட்டோடு ஏற்றுமதி இறக்குமதி ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகளையும் சேர்த்து, தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை விநியோகிப்பதற்கான விரிந்து பரந்த சந்தைப் பரப்பையும் எளிதாகச் சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு உற்பத்தி, விநியோகம் என்று இரண்டு நிலைகளிலும் கிடைக்கிற லாபம் அந்நிய நேரடி முதலீட்டை மேலும் ஊக்கப்படுத்துகிறது.
மீள்வது சுலபமல்ல
அந்நிய நேரடி முதலீட்டை ஏற்றுக்கொண்டுள்ள நாடுகள் தமது முதலீட்டாளர்களின் சந்தைப் பரப்பைக் கவனத்தில் கொள்ள நேரும்போது, தாம் வணிக உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ள நாடுகளுடனான அயலுறவுக் கொள்கையிலும் தன்னிச்சையாக முடிவெடுத்து விட முடியாது. அவசியமற்ற அரசியல் அழுத்தமொன்றை ஒரு நாடு வலிந்து ஏற்றுக்கொண்ட பின்னால், அதிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதில் சாத்தியமாகிவிடுவதில்லை.
பன்னாட்டு வணிகப் போட்டியைச் சமாளிக்க இயலாத நிலையில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் வளரும், வேலைவாய்ப்புகள் பெருகும், பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதுதான் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவான ஒரே வாதம். ஆனால், உள்நாட்டிலேயே முதலீட்டைத் திரட்டுவதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதித்து, இருக்கிற வாய்ப்புகளை இழந்துவிட்டதோடு, அதை அந்நியர்களுக்கு அளித்துவிட்டது இந்திய அரசு. வங்கித் துறையில் 74% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டாகிவிட்டது. காப்பீட்டுத் துறையிலோ 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக வரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது.
கடந்த 25 ஆண்டுகளில் அந்நிய முதலீட்டாளர்களின் சந்தைப் பரப்பு விரிவடைந்துகொண்டே இருக்கிறது. அவர்களது உற்பத்திப் பொருட்களின் விற்பனை அளவும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இருந்தாலும், எவ்விதமான பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.
100% முதலீடு வெற்றியா?
உதாரணத்துக்கு ஒன்றைப் பார்ப்போம். இரும்பு மற்றும் எஃகு உருக்காலைகள் உள்ளிட்ட ஆதாரத் தொழில் துறைதான் உற்பத்தித் துறை இயங்குவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. அதிகளவு முதலீட்டையும் தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கிற இந்தத் துறைதான் அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் தேவையான இயந்திரங்களையும் கருவிகளையும் தயாரிக்கிறது. இந்த ஆதாரத் தொழில்துறையின் தேவை என்பதும்கூட நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டும் ஒரு முக்கிய குறியீடாகக் கருதப்படுகிறது. இத்துறையில் 1985-யே 100% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் 2000 தொடங்கி 2012 வரையிலான 12 ஆண்டுகளில் இந்தியாவில் செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டில் இத்துறையில் செய்யப்பட்ட முதலீடு வெறும் 4% மட்டுமே.
அந்நிய நேரடி முதலீட்டால் தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் நடக்கும், அதன் காரணமாக உள்நாட்டுத் தொழில் துறையின் தொழில்திறன் மேம்படும் என்றும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. பன்னாட்டு உடன்படிக்கை களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ள அறிவு சார் சொத்துரிமைச் சட்டங்களின்படி, காப்புரிமைச் சட்டங்கள் வணிகத்தில் ஏகபோக உரிமையைத் தக்கவைத்துக் கொள்ளவே உதவும். புதிதாக கண்டுபிடிக்கப்படும் தொழில் நுட்பங்கள் யாவும் இனி அதன் கண்டுபிடிப்பாளருக்கே முழுவுரிமை கொண்டதாக இருக்கும். அத்தொழில் நுட்பத்தைப் பிறிதொருவர் பயன்படுத்த வேண்டுமெனின் அதற்கான காப்புரிமைத் தொகையை அளித்தாக வேண்டும். அதாவது, உற்பத்திப் பொருட்களை விநியோகிப்பது போலவே தொழில்நுட்பமும் அதற்கான விலையைப் பெற்றுக்கொண்ட பிறகே பரிமாற்றம் செய்யப்படும். அதுவும் ஒரு வணிகமே.
இன்றைக்கு ஏதாவது ஒரு வழியில், எப்படியாவது அந்நிய முதலீட்டைக் கவர்வது ஒன்றே மத்திய - மாநில அரசுகளின் முக்கியமான பணியாக இருக்கிறது. அந்நிய முதலீடு என்கிற நாற்றினை எங்கிருந்தோ கொண்டுவந்து இங்கே ஊன்றி, தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு, அறுவடையும் முடித்துப் பலனை எங்கோ கொண்டுபோவதில் வயல்காரனுக்கு என்னதான் பயன்? இவனுக்கு குத்தகையும் இல்லை, கூலியும் நிரந்தரமில்லை!
நன்றி இந்து தமிழ் 

பெரியார் 

சமத்துவத்துக்கும் சுயமரியாதைக்கும் எதிரான சாதி அமைப்புதான், பெரியாரின் முதன்மையான இலக்கு.

வளர்ச்சி நோக்கிய மானுடப் பற்று என்பதைத் தவிர, தனக்கு வேறு எந்தப் பற்றும் கிடையாது என்று திட்டவட்டமாகப் பறைசாற்றிய பெரியார், சமூக சுயமரியாதைக்காகத் தனது சொந்த சுயமரியாதையைப் பலியிட்டுக்கொண்டார். “மற்றவர்களால் செய்ய முடியாததை என்னால் மட்டும் எப்படிச் செய்ய முடிகிறது என்றால், நான் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பது இல்லை. உங்கள் பாராட்டு எனக்குத் தேவையில்லைஎன்று கூறிய பெரியார், “தனி மனிதர்களைப் பெருமைப்படுத்தியதால், அவர்களுடைய தவறான கொள்கைகள் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றுவிடுகிறது. என்னுடைய காரியங்களுக்கு அப்படிப்பட்ட விபரீதப் பலன் ஏற்பட வேண்டாம் என்றே கருதுகிறேன். நான் தெய்வத் தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டால், என் வார்த்தையை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். நான் அயோக்கியன் என்று சொல்லப்பட்டால் என் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையாகக் கவனிக்கப்படும்என்றார். அதையும் கடந்து, “என்னை அறியாமலே நான் ஏதாவது மதிப்புப் பெற வேண்டுமென்று கருதியிருந்தாலும், நானே எனக்குத் தீங்கு தேடிக் கொண்டவனாவேன்என்று தன்னையும் புகழ் பொறிக்குள் சிக்கிக்கொள்ளாமல் சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார்.
செப்டம்பர் 17
பெரியாரின் 137வது பிறந்த நாள்.
இறுதி மூச்சு வரை தனது கொள்கையில் உறுதியோடு வாழ்ந்தவர் ஈரோட்டு மண்ணின் பெரியார் 

Wednesday, 16 September 2015

சிறப்புமிகு தர்ணா
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 65000 டவர்களைப் பிரித்து
டவர் கார்ப்பரேசன் அமைக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி 16.09.2015 அன்று ஈரோடு பொதுமேலாளர் அலுவலகத்தில்  தர்ணா நடைபெற்றது.
பங்கேற்ற அனைவருக்கும் நன்றி.





Saturday, 12 September 2015

செப்டம்பர் 16 தர்ணா


நமது நிறுபவனத்தின் சொத்தான 65000 டவர்களைப் பிரித்து டவர் கார்ப்பரேசன் என்ற ஒரு நிறுவனத்தை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதன் முழு விபரங்கள்
இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
நமது நிறுவனத்துன் உயர் அதிகாரிகளுக்குக் கூட இதன் விபரங்கள் இன்னும் தெரியவில்லை.

ஆனால் இந்த முடிவு
நமது நிறுபவனத்தையும், நம்மையும் பாதிக்கும் என்பது மட்டும் தெரிந்த உண்மை.

நமது நிறுவனத்தின் சொத்தை யாருக்கோ தாரை வார்க்கத் துடிக்கும் முயற்சி இது என்பது மட்டும் தெரிகிறது.

இன்றைய உலகச் சூழலால், இந்தியச் சூழலால், அரசாங்க்கத்தின் கொள்கைச் சூழலால் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்கின்றன என்பது மட்டும் புரிகிறது.

நமது நிறுவனத்தைப் பாதுகாக்கவும்
நம்மைப் பாதுகாக்கவும் இந்தப் போராட்டம் மிகவும் தேவையானதே.


செபடம்பர் 16 பொதுமேலள அலுவலகத்தில் நடைபெறும் தர்ணாப் போராட்டத்தில் அனைவரும் பங்க்கேற்போம் வாரீர்.

Friday, 11 September 2015

20
ஈரோடு நகரத்தில் பணிபுரிவோருக்கு 20 சதம் வீட்டு வாடகைப்படி வழங்க BSNL  நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பாரதி நினைவு நாள்
செப்டம்பர் 11
பாரதி நினைவு நாள்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்னல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் அறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்,
பரிதி முன் பணியே போல
நண்ணீய நின் முன் இங்கு
நசிந்திடல் வேண்டும் அண்ணாய்

ஏ பாரதி
முண்டாசுக் கவியே
காகிதம் செய்யச் சொன்னாய்
ஆயுதம் செய்யச் சொன்னாய்

நீ பாடிய தமிழ மண்ணில்
ஒரு நிமிடத்திற்கு 3 கார்கள்
உற்பத்தியாகப் போகிறதாம்

கம்பும், கேழ்வரகும்,
சாமையும் காணாமல்
போய்விட்டன.

மூண்று மாதம் முழுமையாய்ப் பாடுபட்டாலும் நெல்மணிகள் என்ணவோ விளைவதில்லை.

தண்ணீர் மற்றும் உணவு தவிர
எதற்கும் இங்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலை மாற இனி நீ பிறந்து வா
உன் கவியால சொரணை உருவாக்கு

Thursday, 10 September 2015

ஒரு உத்தரவு
ஈரோடு நகரத்தில் பணியாற்றுவோருக்கு 20 சத வீட்டுவாகடகைப்படி வழங்க DOP உத்தரவு வெளியிட்டுள்ளது.
நமது BSNL நிறுவனம் இந்த உத்தரவை வழிமொழிந்து உத்தரவிட்ட பின் 01.04.2015 முதல் இதன் பலன் கிடைக்கும்.

Saturday, 5 September 2015

சேவைப் பதிவேடு சரிபார்ப்பு
சேவைப் பதிவேடுகளை (SERVICE BOOK)
ஊழியர்கள் சரிபார்க்கும்
வாய்ப்பு தரப்பட வேண்டும் என்று
லோக்கல் கவுன்சில் கூட்டத்தில் கோரிக்கை வைத்தோம்.
அது ஏற்கப்பட்டது.
அந்தந்த கோட்ட அதிகாரிகள் அலுவலகத்தில் ஊழியர்கள் சேவைபதிவேட்டைச் சரிபார்த்துக் கொள்ள நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.
அந்தந்த பகுதியில் உள்ள் கிளைச் செயலர்களும் மாவட்டச் சங்க நிர்வாகிகளும் சங்க வேறுபாடு இல்லாமல் இப்பணியில் அனைவருக்கும் உதவிட வேண்டுகிறோம்.

சேவைப் பதிவேட்டில் சரி பார்க்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

சேவை பதிவேடு நல்ல நிலையில் இருக்கிறதா? பைண்டிங்  சரியாக இருக்கிறதா?

பணி நியமன உத்தரவு (APPOINTMENT ORDER) உள்ளதா?


BSNL நிறுவனத்தில் நாம் இணைந்ததற்கான உத்தரவு சேவைப்பதிவேட்டில் உள்ளதா?
அதில் பெயர் மற்றும் இனிசியல் சரியாக இருக்கிறதா?

குடும்ப உறுப்பினர் பட்டியல் இருக்கிறதா?
குடும்ப உறுப்பினர்கள் பெயர், பிறந்த தேதி சரியாக இருக்கிறதா?

GPF,கிராஜிவிட்டி போன்றவற்றிற்கான நாமினேசன் படிவங்கள் இருக்கிற்தா?
அவை சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா?

01.01.2007 சமபள நிர்ணயத்தின் நகல் (PAY FIXATION MEMO)
உள்ளதா?

பதவி உயர்வு பெற்றதற்கான
சமபள நிர்ணயத்தின் நகல் (PAY FIXATION MEMO)
உள்ளதா?

விடுப்பு கனக்கு சரியாக உள்ளதா?

10.06.2013  அன்று பெற்ற 78.2 சத பஞ்சப்படி இணைப்புக்கான சம்பள நிர்ணய நகல் உள்ளதா?

இப்பணி நடைபெறும் இடங்களும்
தேதிகளும் பின்வருமாறு
பவானி  07.09.2015 மற்றும் 08.09.2015
கோபி    10.09.2015 மற்றும் 11.09.2015
சத்தி    14.09.2015  மற்றும் 15.09.2015
பெருந்துறை 16.09.2015 மற்றும் 19.09.2015
தாரபுரம்  21.09.2015 மற்றும் 22.09.2015
காங்கயம்  23.09.2015 மற்றும் 24.09.2015
எக்ஸ்டர்னல் 26.09.2015 27.09.2015 மற்றும்
28.09.2015
ஈரோடு ரூரல் 29.09.2015 மற்றும் 30.09.2015

கணிசமான ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர்.
எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தவறுகள் இருப்பின் சரி செய்து கொள்ள் இந்த வாய்ப்பைத் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

வாழ்வுக்கு வித்திட்டோருக்கு
வண்க்கம் சொல்வோம்




அன்னைக்கும் தந்தைக்கும்
அடுத்தபடியாக
போற்றப்பட்டவர்கள் கல்வி புகட்டிய ஆசிரியர்கள்.
போற்றுதலுக்குரிய
ஆசிரியப் பெருமக்களுக்கு
ஆசிரியர் தினமாம் செப்டம்பர் 5ல்
நன்றியோடும் வணக்கத்தோடும்
வாழ்த்து சொல்வோம். 

Thursday, 3 September 2015

             இரங்கல்

நமது இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் தோழர் பாபநாசம் அவர்களின் துணைவியார் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
உறுதுணையை இழந்திருக்கும் நம் அருமைத் தோழனுக்கும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.