NFTECHQ

Friday, 5 October 2018


வள்ளலார் 196
அக்டோபர் 5  வள்ளலாரின் 196ஆவது பிறந்ததினம்.
19ஆம் நூற்றாண்டின் ஆட்சி  கருணையிலா ஆட்சிஎன்கிறார் வள்ளலார்.
பசுக்களைக் கொன்று யாகம் வளர்த்தலில் வள்ளலாருக்கு உடன்பாடில்லை.  ஜீவகாருண்யம் என்ற உயிரிரக்கக் கோட்பாட்டை வள்ளலார் வலியுறுத்தினார். 19ஆம் நூற்றாண்டை பஞ்சம் தாக்கியபோது வள்ளலார் பசியால் வீடுதோறும் இரந்து உண்ணும் வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட மக்களைக்  கண்டு உளம்பதைத்துதான் பசியால் ஏற்படும் துன்பங்களைப் பட்டியலிட்டு இதனைப் போக்கினால்தான் உயிர் இரக்கம் பற்றிய சிந்தனைக்கு மனித மனம் ஈடுபடும் என்றார். கருணையே இல்லாத காலனிய ஆட்சியில் எவரும் கண்டுகொள்ளாத மக்களுக்காகக் கவலைப்பட்டு அவர்களது பசியைப் போக்க ஒரு நிறுவனத்தை ஏற்படுத்துகிறார்.
உண்பதற்கு உணவில்லை; உடுப்பதற்கு நல்ல கூரை இல்லை; இருப்பதற்கு இடமில்லை; உழுவதற்கு நிலமில்லை; விரும்பியபடி செய்ய பொருள் இல்லை. இப்படித் துன்பப்படுகின்ற ஜீவன்களிடம் ஜீவகாருண்யமே காட்ட வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறார்.
ஜீவகாருண்யம் என்பது மனிதர்களிடத்து மட்டும் அல்லாது உயிருள்ள எல்லா ஜீவன்களிடத்தும் பரவ வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்..
எதிர்ப்பு தெரிவிக்காத ஜீவன்களைப் பலியிட்டுதான் வழிபாடு நிகழ்த்த வேண்டும் என்பதல்ல; பலியிடாமல் வழிபடப் பூசணிக்காய் கீறல் போன்றவற்றைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியும் உள்ளார்.
சடங்குகள், சம்பிரதாயங்கள் கூடாது என்றும், இறந்தோருக்குச் சடங்குகள் செய்வதோ, கணவன் இறந்தால் மனைவிக்குத் தாலி வாங்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.
காலம்காலமாகப் பின்பற்றும் சடங்குகளினால் ஏற்படும் மனத்தாக்கங்கள் பல்வேறு இழப்புகளுக்குக் காரணமாகின்றன. ஆகவே, அவற்றை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். தமது ஒரே நெறியானஅருள்நெறிஉலகமெல்லாம் பரவ வேண்டும் என்று விரும்பினார்.
மக்கள் அனைவரும் நம்மேல் தொடுக்கப்படும் பிரிவினை அம்புகளைக் கருத்தில்கொள்ளாமல் வள்ளலார் கூறிய எளிய வழியான உயிர் இரக்கமாகிய ஜீவகாருண்ய நெறியில் அருள்நெறி பின்பற்றி வாழ வேண்டும் என்று வற்புறுத்துகிறார்.
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திர சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே
என்று கூறும் வள்ளலார், என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் என்று தெளிவுபடுத்துகின்றார்.
அருள்நெறி என்பதும் சன்மார்க்க நெறி என்பதும் அன்பு; தயவு; கருணை முதலியன அனைவரும் பின்பற்றக்கூடிய எளிய வழிகள்தான். அதனால் உயிர்சுழற்சி இயல்பாய் நடைபெறும்; எவரும் எவரையும் தாக்கி அழிக்க மனம் வராது. உணவுக்காகவோ, பகைக்காகவோ எந்த உயிரையும் கொல்லாமல் அருள்நெறியோடு உலக உயிர்களெல்லாம் சன்மார்க்க நெறியில் சிறந்து வாழ வள்ளலாரின் 196ஆம் அகவை நாளில் சூளுரைப்போம்; பின்பற்றுவோம்.

Wednesday, 3 October 2018


எம்.பி.க்களுக்கு  4 ஆண்டுகளில் ரூ.1997 கோடி ஊதியம்!

எம்.பி.க்களுக்குக் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1997 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.. மூலம் தெரியவந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுட் என்பவர் கடந்த 4 ஆண்டுகளில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் குறித்து நாடாளுமன்ற செயலாளரிடம் ஆர்.டி..யின் கீழ் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் தற்போது மொத்தம் 545 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் நியமன எம்.பி.கள் இருவர் தவிர்த்து 543 பேர் மக்களால் தேர்வு செய்யப்படுபவர்கள், மாநிலங்களவையில் 245 எம்.பி.க்கள் என மொத்தம் 790 எம்.பி.க்கள் உள்ளனர்.
மக்களவை எம்.பி. ஒருவருக்குச் சராசரியாக ஆண்டுக்கு 71 லட்சத்து 29 ஆயிரத்து 390 ரூபாய் ஊதியமாகத் தரப்படுகிறது. மாநிலங்களவை எம்.பி. ஒருவருக்கு 44 லட்சத்து 33 ஆயிரத்து 682 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக மக்களவை எம்.பி.க்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 1,554 கோடி ரூபாய் ஊதியமாகத் தரப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு 443 கோடி ரூபாய் ஊதியமாக 4 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதேவேளையில், ஜனநாயக சீர்திருத்த அமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனரான ஜகதீஷ் சொக்கர் இது குறித்து கூறுகையில், “எம்.பி.க்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் ஊதியத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். கார்ப்ரேட் நிறுவனங்களில் ஊழியர்களின் ஊதியம் இறுதி செய்வது போல், எம்.பி.க்களின் ஊதியம், சலுகைகள் போன்றவை வெளிப்படையாக, நாட்டின் செலவுக்கு ஏற்ப முடிவு செய்யப்பட வேண்டும்என்று தெரிவித்துள்ளார்.
எம்.பி.க்களின் மாத ஊதியத்தை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்துவதாக இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். இந்த அறிவிப்பு ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்தது. எம்.பி.க்களின் ஊதியம் 5 ஆண்டுகள் கழித்து 2023இல் மீண்டும் மாற்றியமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


தியாகம்

தியாகம் என்ற வார்த்தைக்கு, இன்றைய பெரும்பான்மையான இளைய தலைமுறையினரின் அகராதியில் அர்த்தம் கிடையாது. அதற்கென்று எந்த விலையும் கிடையாது. அவரவர் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்வதே அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது, இன்று பலரது எண்ணமாக உள்ளது. வாழ்வின் அர்த்தத்தைப் புரியாதவர்களாகவும், அப்பாவிகளாகவும், மனநலம் குன்றியவர்களாகவும், இயலாமைகளைப் பொதுவில் மறைப்பவர்களாகவும் மட்டுமே, தியாகம் புரிந்தவர்கள் இன்றைய சமூகத்தில் மரியாதை பெறுகின்றனர்.
அடியும் உதையும் இல்லாமல் குழந்தைப் பருவத்தைக் கடப்பது, ஒரு தலைமுறையின் எண்ணத் தொடர்ச்சிகளில் ஏற்பட்ட மாற்றம் என்பது இப்போது யாருக்கும் புரிவதில்லை. முந்தைய தலைமுறையின் கணக்கிலடங்கா தியாகங்களால் தான் இன்றைய சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்வதில்லை.
அடுத்தவரின் எண்ணத்துக்கு மதிப்பளிப்பதில் இருந்து தொடங்குகிறது தியாகத்தின் பயணம். பட்டினி கிடந்து குழந்தைகளின் பசியாற்றிய பெற்றோர் குறித்த விவரணைகள், இன்று பலருக்குக் கட்டுக்கதை தான். தான் பறிகொடுத்த கல்வியைத் தனது மக்கள் பெறவேண்டும் என்று ஒருவர் விரும்புவது, மற்றவர்க்கு இன்று இயலாமையாக மட்டுமே தெரிகிறது. வெறுமனே தலைமுறை இடைவெளி என்று இதனைக் கடந்துவிட முடியாது. அப்படிக் கடந்து செல்கிறோம் என்றால், எண்ணற்ற தியாகிகள் மனங்களைச் சிதைத்துப் போகிறோம் என்பதே உண்மை.

Tuesday, 2 October 2018


அக்டோபர் 2
காமராஜர் நினைவு தினம்
கல்வி என்னும் சொல் இருக்கும் வரை காமராஜர் புகழ் வாழும்

Monday, 1 October 2018


அக்டோபர் 2
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்ததினம்
அண்ணலின் பெயரை அரசியல் சூதாட்டத்துக்கும் பயன்படுத்துவோர் மலிந்து விட்ட சூழல் இது. இச்சூழலில் அண்ணல் காந்தியடிகள் குறித்து இந்து தமிழ் இதழின் பதிவு இது.

தனது மனைவி கஸ்தூரிபாய் ஆஸ்ரம விதிமுறைகளுக்கு மாறாக 4 ரூபாயை மறைத்து வைத்திருந்தால் கோபப்பட்டு, நவஜீவன் பத்திரிகையில் தனது மனைவியின் செயலைக் குறிப்பிட்டு கட்டுரைஎழுதியுள்ளார்.
எப்போதும் நீதியையும், நேர்மையையும், வெளிப்படைத் தன்மையையும் ஒழுங்கையும், சுயஒழுக்கத்தையும் கடைப்பிடித்த மகாத்மா காந்தி, தனது மனைவி சிறிய தவறு செய்தபோதிலும் கூட அதை கட்டுரையில் குறிப்பிட்டு வருந்தினார்.
  
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்ததினம் நாளை உலகம் முழுவதும் இந்தியர்கள் மட்டுமின்றி, அகிம்சையை விரும்புபவர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் அண்ணல் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நினைவு கூறலாம்.
கடந்த 1929-ம் ஆண்டு மகாத்மா காந்தி நடத்திய “நவஜீவன்” வாரப் பத்திரிகையில் தனது மனைவி கஸ்தூரிபாய் குறித்து இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். “எனது சோகம், எனது அசிங்கம்” என்ற தலைப்பில் இந்த கட்டுரை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள காந்தியின் ஆசிரமத்தில் நடந்த சம்பவத்தை காந்தி குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கட்டுரையின் முழு தாத்பரியமே, உண்மையையும், நீதிநெறிமுறைகளையும் தான் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன் என்பதையும், தனது விளக்கத்தையும் மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் தனது மனைவி கஸ்தூரிபாய் குறித்து பல்வேறு பெருமைகளையும் கூறும் மகாத்மாகாந்தி, அவர் செய்த தவறுகளை ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை, அதை தவறு என்றும் உச்ச கட்டமாக “திருட்டு” என்றும் வன்மையாகச் சாடியுள்ளார்.
ஆசிரம விதிப்படி பணத்தை யாரும் வைத்துக் கொள்ளக்கூடாது. ஆசிரமத்துக்கு வந்து காந்தியையும், அவரின் மனைவி கஸ்தூரிபாயையும் சந்திக்க வருபவர்கள் கொடுக்கும் பரிசுகள், பணம் ஆகியவற்றை ஆசிரமத்துக்கு கொடுத்துவிட வேண்டும். எந்தப் பொருட்களையும் பணத்தையும் சொந்த பயன்பாட்டுக்குவைத்துக் கொள்ளக்கூடாது. திருடர்கள் ஆஸ்ரமத்துக்கு வந்தால்கூட ஏதும் இல்லை என்று ஏமாற்றமடைந்து செல்லவேண்டும். அதுபோன்று ஆசிரமம் அமைந்திருக்க வேண்டும் என்று காந்தி விரும்பினார்.
ஆனால், கஸ்தூரிபாயோ காந்திக்கு தெரியாமல் நூறு ரூபாயை மறைத்து வைத்திருந்தார். ஒரு நாள் திருடன் காந்தியின் அறைக்குள் நுழைந்துவிட்டான். ஆனால், காந்தி திருடன் நுழைந்துவிட்டான் என்றுசொன்னதும் அவர் பதற்றப்படாமல் இருக்க, கஸ்தூரிபாய் பதற்றத்துடன் இருந்தார். எந்தவிதமானபொருளும், பணமும் இல்லாதவர் ஏன் பதற்றப்பட வேண்டும் என்று காந்தி சிந்தித்தார்.
அதுமட்டுமல்லாமல், ஆஸ்திரமத்துக்கு வந்து சென்றவர்கள் சிலர் அளித்த 4 ரூபாயையும் கஸ்தூரிபாய்ஆசிரமத்தில் அளிக்காமல் இருந்துள்ளார். இந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு மகாத்மா காந்தி தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.
மகாத்மா காந்தி எழுதியிருப்பதாவது
எனது மனைவியிடம் ஏராளமான நல்ல குணங்கள் இருக்கின்றன. அதேசமயம், தவறான குணம் இருப்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆசிரம விதிப்படி ஆசிரமத்தில் தங்கி இருப்பவர்கள் யாரும் கையில் பணம் வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு வைத்திருப்பது ஆசிரம விதிக்கு முரணானது.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் கஸ்தூரிபாய் தன்னிடம் 200 ரூபாய் வரை வைத்திருந்தார். இந்த பணம் அனைத்தும் ஆஸ்திரமத்துக்கு வருபவர்கள் பரிசாக அளித்தது. ஆனால், இந்த பணத்தை அவர் ஆசிரமத்துக்கு அளிக்காமல் தன்னிடமே மறைத்து வைத்திருந்தார்.
ஒருநாள் எங்களுடைய ஆசிரமத்துக்கு ஒரு திருடன் வந்து என் அறைக்குள் நுழைந்துவிட்டான். அங்கு என்ன பணமா இருக்கப் போகிறது என்று நான் அமைதி காத்தேன். அந்தத் திருடன் எதையும் எடுத்துச்செல்லவில்லை. ஆனால், என் மனைவியோ பதற்றத்தோடு இருந்தார். நான் அப்போதே என் மனைவி கடமையில் இருந்து தவறிவிட்டதை கண்டுபிடித்துவிட்டேன்.
மற்றொரு சமயம், சிலர் ஆசிரமத்துக்கு வந்து என்னைச் சந்தித்துவிட்டு கஸ்தூரிபாவிடம் 4 ரூபாயை அளித்தார்கள். ஆனால், அந்த பணத்தையும் கஸ்தூரிபா ஆசிரம அலுவலகத்திடம் ஒப்படைக்காமல், தானே வைத்துக் கொண்டார்.
என்னைப் பொருத்தவரை என் மனைவி செய்தது “திருட்டு” என்று குறிப்பிடுவேன். ஆசிரமத்தில் இருந்தவர்களில் ஒருவர் கஸ்தூரிபாவி்ன் செயலைக் குறிப்பிட்டார். அதன்பின் கஸ்தூரிபா தன்னிடம் இருந்த பணத்தை ஆசிரமத்துக்கு அளித்திவிட்டு வருத்தம் தெரிவித்து, இனிமேல் நடக்காது என்று உறுதியளித்தார்.
கஸ்தூரிபாய் தான் செய்த தவற்றுக்கு வருந்தினார். அதுமட்டுமல்லாமல் இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடந்தால், நான் ஆஸ்திரமத்தை விட்டும், என்னை விட்டும் விலகிச் சென்றுவிடுவதாகத் தெரிவித்தார். கஸ்தூரிபாவின் உறுதிமொழியை ஆசிரமத்தில் உள்ளவர்கள் ஏற்றனர்.
இறுதியாக நான் சொல்வது என்னவென்றால், என் கடமையை நான் செய்யாவிட்டால் கூட அது கடமை தவறியது என்றுதான் அர்த்தம்.
இவ்வாறு மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய மனைவி செய்த தவறாக இருந்தாலும் அதை மறைக்க வேண்டும் என்ற துளி எண்ணமும் இல்லாமல், தனது கட்டுரையில் வெளிப்படையாகக் குறிப்பிட்டு கூறி பரிசுத்தமானவர் மகாத்மா காந்தி என்பதில் சந்தேகமில்லை. தான் மட்டுமல்ல தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரும் வாழும் வரைக்கும் ஒழுக்க நெறி மாறாமல், வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை விரும்பினார்.