NFTECHQ

Sunday 28 June 2015

ஓராண்டு

சேவைக்குக் கிடைத்த தேசிய விருது!

ஊசி போடுவது, மாத்திரைகளை நோயாளி களுக்குத் தந்தனுப்புவது மட்டுமே தன் கடமை என்று நினைக்கவில்லை கல்பனா. அந்த உயரிய நினைப்புதான் அவருக்குக் குடியரசு தலைவர் கையால் விருது பெற்றுத் தந்திருக்கிறது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உதவி செவிலியர் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் கல்பனா சம்பத், கிராமத்து அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர். சர்வதேச ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் விருதைச் சர்வதேசச் செவிலியர் தினமான மே 12-ம் தேதியன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பெற்றுக்கொண்டார். நாடு முழுவதும் மொத்தம் 35 செவிலியர் பணியாளர்களுக்கு இந்த ஆண்டு இந்த விருது வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள பெரும்பாதி கிராமம்தான் கல்பனாவின் சொந்த ஊர். ஏழ்மையான குடும்பம். தந்தை பீடி சுற்றும் தொழில் செய்தார்.
என் அப்பா கம்யூனிஸத் தத்துவங்களைப் படிப்பார். அதனால் வீ்ட்டில் பாரதியார், கம்யூனிஸ நூல்கள், ரஷ்யப் பதிப்பாக வெளிவந்த இலக்கிய நூல்கள் நிறைய இருக்கும். எனக்கு இரண்டு தங்கைகள், இரண்டு தம்பிகள். அனைவரையும் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிக்க வைத்தார். 78-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி முடித்தபோது, ராணுவத்தில் உதவித் தொகையோடு நர்சிங் படிக்கலாம் என்ற செய்தியைப் பத்திரிகையில் பார்த்து விண்ணப்பித்தேன். அகில இந்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுக் கொல்கத்தாவில் ராணுவத்தின் மூலம் நர்சிங் படித்தேன் என்று சொல்கிறார் கல்பனா.
கிராமத்தில் பிறந்து, வளர்ந்த வருக்குக் கொல்கத்தா போன்ற பெருநகரத்தில் தங்கிப் படிக்கும் தைரியத்தை அவருடைய பெற்றோர் தந்தனர். உதவித்தொகையுடன் படிப்பை முடித்து, ராணுவத்தில் லெப்டினென்ட் பொறுப்பில் பணியில் சேர்ந்தார். இமாச்சல பிரதேசத்தில் பதான்கோட்டில் பயிற்சி முடித்து, பணியைத் தொடங்கினார்.
அது மிகவும் பதற்றமான நேரம். ப்ளூ ஸ்டார் ஆபரேஷன் நடந்துகொண்டிருந்தது. நாள் முழுக்க வேலை இருக்கும். பிறகு ஜம்மு அருகே உதம்பூரில் பணி மாற்றம் கிடைத்தது. சீக்கியர் விவகாரம், இந்திரா காந்தி படுகொலை போன்ற சம்பவங்கள் நடந்த காலம் அது. ஆறு மணிக்கு மேல் மின்சார இணைப்பு இருக்காது. பனி அதிகமாக இருக்கும். பஸ் வசதி இருக்காது. டிரக்கில்தான் செல்ல வேண்டும். புதிய இடம், புரியாத மொழி. எல்லாமே எனக்குப் பல அனுபவங்களைத் தந்தன என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் கல்பனா. கல்பனாவின் வருமானத்தில் அவருடைய தம்பி, தங்கைகள் படித்தனர்.
அனுபவங்கள் தந்த பாடம்
பிறகு புனே, வெலிங்டன், கான்பூர் என்று அடுத்தடுத்துப் பணி மாறுதலும் பதவி உயர்வும் கிடைத்தன. இதற்கிடையே கல்பனாவுக்குத் திருமணமானது. பதினோரு ஆண்டுகள் ராணுவப் பணிக்குப் பிறகு 93-ல் பணியிலிருந்து விலகினார். ஜிப்மரில் முன்னாள் ராணுவவீரர் ஒதுக்கீட்டில் வேலை கிடைத்தது. ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகள் பாதுகாப்பு கமிட்டி, சேவைத்தரம் குழு, விபத்துப் பாதுகாப்பு குழு, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் தற்போது பணிபுரிந்து வருகிறார்.
என் கணவர் மாநில அரசு பணியில் இருக்கிறார், குழந்தைகள் மருத்துவமும் பொறியியலும் படிக்கின்றனர். ராணுவப் பணியில் இருந்ததால் பல அனுபவங்களுடன் ஆங்கிலம், மலையாளம், இந்தி, பெங்காலி, பஞ்சாபி, மராட்டி ஆகிய பல மொழிகள் எனக்குப் பரிச்சயமாகின. ஜிப்மரில் பணியாற்றும் டாக்டர்கள், அதிகாரிகள், நர்ஸ்கள், மாணவர்கள் பலரும் வெளிமாநிலத்தவர்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியாது. அதனால் அவர்கள் நோயாளிகள் கூறுவதைப் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் கற்றுத்தர முடிவெடுத்தேன்.
30 பக்கத்தில் சிறிய புத்தகம் தயாரித்தேன். மருத்துவமனையில் தமிழ் தெரியாதவர்களுக்கான ஆங்கில வழி கற்றல் முறையில் அந்தப் புத்தகத்தை வடிவமைத்தேன். பணிமுடிந்த பிறகு மாலையில் பயிற்சி வகுப்பு நடத்துகிறேன் என்கிறார் கல்பனா. மருத்துவம் தொடர்பான வார்த்தைகள், நோயாளிகளின் பிரச்சினைகள் சார்ந்த வார்த்தைகள், அவர்கள் கேட்கும் முக்கியக் கேள்விகள் ஆகியவை அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செவிலியர் பணியில் இருக்கிறார் கல்பனா. சுனாமி பேரழிவு, தானே புயல் பாதிப்பு ஆகிய நாட்களில் பணியாற்றியது, வெளிமாநிலத் தவருக்குத் தமிழ் கற்றுத்தரும் பணி ஆகியவற்றுக்காக கல்பனாவுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.
நமக்குப் பிடித்த வேலையை விரும்பிச் செய்வது மனநிறைவு தரும். மருத்துவச் சேவை என்பது ஒரு தனி உலகம். நேரம் காலம் பார்க்காமல் பணிபுரியும் ஏராளமான பெண்கள் இன்று பல துறைகளில் உள்ளனர். ஆனால், பல பெண்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொண்டு, வேதனைப்படுகிறார்கள். அது தவறானது. எந்தப் பிரச்சினை வந்தாலும், இதுவும் கடந்து போகும் என்று நினைத்துக்கொள்வேன் என்று தன் வெற்றிக்கான ரகசியத்தைச் சொல்லி முடிக்கிறார் கல்பனா.


சிறுதானியம் பெற்றுத் தந்த தேசிய விருது


பதப்படுத்தப்பட்டுக் கண்கவர் உறைகளிலும் டப்பாக்களிலும் அடைத்து விற்கப்படுகிற பொருட்களில் மலிந்திருக்கும் ரசாயனங்களைப் பற்றி பேசிப் பேசி மாய்ந்துபோகிறோம். தண்ணீர், அரிசி, காய்கறிகள் என்று அத்தியாவசியப் பொருட்களிலும், செயற்கைப் பொருட்களின் தாக்கம் இருப்பதை வேதனையோடு பகிர்ந்துகொள்கிறோம்.
ஆனால், கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிற நம் பாரம்பரிய உணவவுப் பொருட்கள் குறித்தோ, அவற்றில் நிறைந்திருக்கும் சத்துகள் குறித்தோ பலரும் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.
நேரமில்லை என்ற ஒற்றைக் காரணத்தைச் சொல்லிக்கொண்டு நிமிடங்களில் தயாராகும் துரித - உடனடி உணவுகளின் பின்னால் ஓடி வாழ்வையும் ஆரோக்கியத்தையும் தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், நம் பாரம்பரிய தானியங்களும் உணவுப் பொருட்களுமே ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டி என்று சொல்வதுடன் மட்டும் நின்றுவிடாமல், அதை ஊருக்கு வழங்கி ஊட்டத்தைப் பரப்பிவருகிறார் திருவையாற்றைச் சேர்ந்த ராஜேஸ்வரி. அந்த உறுதிதான் அவருக்குத் தேசிய விருதைப் பெற்றுத் தந்திருக்கிறது.
பலவிதமான சிறுதானியங்கள், பட்டை தீட்டப்படாத அரிசி வகைகள், பயறு வகைகள், பொடி வகைகளால் நிரம்பியிருக்கிறது ராஜேஸ்வரியின் வீடு . ஒவ்வொன்றையும் பக்குவமாகப் பிரித்து, அவற்றுக்குரிய உறைகளில் நிரப்புகிறார் ராஜேஸ்வரி.
அனைத்துமே உணவுப் பொருள் என்பதால் தரத்தில் கவனத்துடன் இருக்கிறார். பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்திருக்கும் ராஜேஸ்வரிக்கு இந்த வெற்றி எப்படிச் சாத்தியமானது?
வழிகாட்டிய புத்தகங்கள்
திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே இருக்கும் பழமார்னேரி கிராமம்தான் ராஜேஸ்வரியின் பூர்வீகம். அப்பா பெட்டிக்கடை நடத்த, அம்மா வீட்டுத்தலைவியாக இருந்தார். அக்கா, இரண்டு அண்ணன்களுக்கு இடையே படிப்பு என்பதே பெரும் கனவாகத்தான் இருந்தது ராஜேஸ்வரிக்கு.
என்னைப் பத்தாவது வரைக்கும் படிக்க வச்சதே பெரிய விஷயம். அதுக்கு மேலே படிக்கணும்னா பக்கத்து ஊருக்குத்தான் போகணும். அதனால ஸ்கூலை விட்டு நிறுத்திட்டாங்க என்கிறார் ராஜேஸ்வரி. அதன் பிறகு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும், வீட்டு வேலைகளுடன் மட்டும், தன் எல்லையை அவர் சுருக்கிக்கொள்ளவில்லை.
அஞ்சல் முறையில் ஓவியம் பயில்வது, நாளிதழ்கள், புத்தகங்கள் வாசிப்பது என்று தனக்கான உலகத்தை உருவாக்கிக்கொண்டார். தஞ்சாவூரில் சோப்பு ஏஜெண்ட் கடை நடத்தும் ரவிக்குமாரைத் திருமணம் செய்ததும் திருவையாற்றுக்குக் குடியேறினார்.
அதன் பிறகு குடும்பம், குழந்தைகள், அவர்களுடைய படிப்பு என்று காலம் றெக்கைக் கட்டி பறந்தது. அப்போதும் புத்தகங்கள் வாசிப்பதை மட்டும் ராஜேஸ்வரி நிறுத்தவில்லை.
என் கணவரும் மகள்களும் வெளியே கிளம்பியதும், வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காது. எதையாவது படிச்சுக்கிட்டே இருப்பேன். அப்படிப் படிக்கும் போதுதான் ஒரு புத்தகத்துல, அருப்புக்கோட்டைக்குப் பக்கத்துல இருக்கற ஒரு கிராமத்துல யாருக்கும் சர்க்கரை வியாதியே இல்லைன்னு வந்த செய்தியைப் படிச்சேன்.
காரணம் அந்தக் கிராமத்துல எல்லாருமே சிறுதானிய வகைகளை அதிகமா சாப்பிடுறதுதான். அதேபோலச் சர்க்கரை வியாதியால பாதிக்கப்பட்டவங்க சென்னையில அதிகமா இருக்கறதாகவும் அதுல படிச்சேன். அப்போதான் சிறுதானியங்கள் மேல எனக்கு ஆர்வம் அதிகமாச்சு என்கிறார் ராஜேஸ்வரி.
அதற்குப் பிறகு தன் வீட்டுச் சமையலறையில் சிறுதானியம் மற்றும் பட்டை தீட்டப்படாத அரிசி வகைகளுக்கு அதிக இடமளித்தார். அதன் பலனை அவரே அனுபவித்து உணர்ந்தார். தனக்கும் தன் வீட்டு உறுப்பினர்களுக்கும் முன்பு இருந்ததைவிட ஆரோக்கியமும் புத்துணர்ச்சியும் மேம்பட்டிருந்ததை உணர்ந்தார்.
சிறுதானியத் தேடல்
சிறுதானிய வகைகளில் கஞ்சி, களி போன்ற சில வகைகளில் மட்டுமே சமைக்க முடியும், அவற்றில் சுவை அதிகம் இருக்காது என்பது பலரது மூடநம்பிக்கை. விதவிதமான சிறுதானிய உணவு வகைகளாலும் பொடி வகைகளாலும் அந்த நினைப்பைத் தகர்த்தெறிந்தார் ராஜேஸ்வரி.
அதைப் பார்த்து அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் தங்களுக்கும் அந்தப் பொடி வகைகளைச் செய்து தரும்படி கேட்டனர். அந்தப் புள்ளியில் இருந்துதான் ராஜேஸ்வரியின் வெற்றிப் பயணம் தொடங்கியது.
எதையுமே முறைப்படி கற்றுக்கொண்டு களத்தில் இறங்க வேண்டும் என்பதற்காகத் தஞ்சாவூரில் இருக்கும் இந்தியப் பயிர் பதனத் தொழில்நுட்பக் கழகத்தில் (IICPT) உறுப்பினராகச் சேர்ந்தார். அங்கு நடக்கும் பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள் அனைத்துமே ராஜேஸ்வரியின் தேடலுக்கு விருந்தாக அமைந்தன.
செயற்கைப் பொருட்களின் சேர்க்கை இல்லாமல் இயற்கை வழியில் உணவு தானியங்களையும் பொருட்களையும் பதப்படுத்தும் பக்குவத்தை அங்கே கற்றறிந்தார். அங்கு நடந்த விவசாயிகளுடனான சந்திப்பால் பலதரப்பட்ட விவசாயிகளும் ராஜேஸ்வரிக்கு அறிமுகமானார்கள். அதனால் தேர்ந்தெடுத்த தானிய வகைகளை நேரடியாக அவர்களிடம் இருந்து பெற முடிந்தது.
செயற்கைக்குத் தடை
இரண்டு நாட்களில் கெட்டுப் போவதுதான் உணவுப் பொருட்களின் இயல்பு. ஆனால், இன்றைக்குக் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள்வரை கெட்டுப்போகாத உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன.
அவற்றில் அளவுக்கு அதிகமாக ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருப்பதே காரணம். ஆனால், நம் முன்னோர் இயற்கை வழியில் பதப்படுத்தும் முறையைத் தெரிந்துவைத்திருந்தார்கள். அந்த முறையைத்தான் எங்கள் தயாரிப்புகளில் பயன்படுத்துகிறோம் என்கிறார் ராஜேஸ்வரி.
சத்துமாவு வகைகள், விதவிதமான அரிசி வகைகள், பட்டை தீட்டப்படாத தானியங்கள், உடனடி பொடி வகைகள் என்று பலவற்றைத் தயாரித்தும், வாங்கியும் விற்பனை செய்கிறார். ஆரம்பத்தில் உள்ளூரில் மட்டுமே விற்பனை செய்தவர், சென்னை போன்ற பெருநகரத்திலும் தற்போது தடம்பதித்திருக்கிறார்.
அங்கீகாரம் தந்த விருது
சமூகத்துக்குப் பயன்படும் புதிய கண்டுபிடிப்புக்குப் பரிசு அறிவித்து மத்திய அரசின் சார்பில் வெளிவந்த விளம்பரம், என் கவனத்தை ஈர்த்தது. நான் செய்யும் வேலையில் எனக்கு நம்பிக்கை இருந்ததால், நானும் விண்ணப்பித்தேன். திடீரென ஒரு நாள் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அழைப்பு.
என் தயாரிப்புகளை அனுப்பிவைக்கச் சொன்னார்கள். அனுப்பி வைத்தேன். என்னைப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்திருப்பதாகச் சொன்னார்கள். மகளிர் தினத்தன்று டெல்லியில் நடந்த விழாவில் ஸ்ருஷ்டி சம்மான் விருது பெற்ற அந்தக் கணம், இன்னும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை மனதில் ஏற்படுத்தியிருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் ராஜேஸ்வரி.
ராஜேஸ்வரியின் பத்து வருட உழைப்புக்கும் தேடலுக்கும் கிடைத்த அங்கீகாரம்தான் இந்த ஸ்ருஷ்டி சம்மான் விருது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதிகளிலும் சென்னையில் காதி விற்பனை நிலையங்களிலும் இவரது சுகா டயட் நேச்சுரல்புட்ஸ் தயாரிப்புகள் கிடைக்கின்றன.
நானும் என் கணவரும் ஒவ்வொரு கடையாகச் சென்று எங்கள் தயாரிப்புகளின் மாதிரிகளைக் கொடுத்து விற்பனைக்கு வைக்கச் சொன்னோம். எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தியவர்களே, இன்றைக்கு எங்களைத் தேடிவந்து வாங்குகிறார்கள்.

பெண்களின் முக்கியப் பிரச்சினையான பி.சி.ஓ.டி. சிக்கலுக்கும், கொழுப்பு மற்றும் எடை குறைப்பு ஆகியவற்றுக்கும் எங்கள் தயாரிப்புகள் தீர்வாக இருக்கின்றன என்று தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நடத்திய மருத்துவ ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டிகிறது ராஜேஸ்வரி விற்பனை செய்யும் பொருட்கள் தரும் ஊட்டம், அவர் வார்த்தைகளிலும் எதிரொலிக்கிறது.

Friday 26 June 2015

குழப்பத்தில் நேசம்


நேசம் கோல்டு என்ற BSNL பிரிபெய்டு பிளான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்று, விற்பனையும் நன்றாக உள்ளது.
ஆனால் இதிலும் சில குழப்பங்கள் உருவாக்க்கப்பட்டுள்ளது.
மாதம் 50 எஸ்.எம்.எஸ் என்பது 25 எஸ்.எம்.எஸ் ஆகக் குறைக்கப்பட்டுள்ள்து.
பிளான் வேலிடிட்டி, டேரிப் வேலிடிட்டி என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. PV8-PV9-PV49 எனவும் குழப்பப்பட்டுள்ளது.
எது நடக்கிறதோ அது நண்றாகவே நடக்கிறது என்பார்கள்.
எது நண்றாகப் போகிறதோ அதை சீரழிப்போம் என்கிறார்கள் சிலர்.

BSNL நிறுவனத்தைப் புத்தாக்கம் செய்வோம்.

Thursday 25 June 2015

இழந்ததும் மீட்டதும்

01.01.2007 க்குப் பின் பணி நியமனம் பெற்றவர்களுக்கு 30 சத ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. இதற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்ததே.
அந்த இழப்பை ஈடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
01.01.2007 க்குப் பிறகு பணியில் சேர்ந்த TTA தோழர்களுக்குஒரு ஆண்டு உயர்வுத் தொகை 10.05.2010 முதல் வழங்க BSNL போர்டு கூட்டத்தில்
ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும்.

30 சத இழப்பை இது எந்த அளவுக்கு ஈடு செய்யும்? 

பலன் பெறும் TTA தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

Wednesday 24 June 2015

ஆட்டம் காணும் ஆணிவேர்


BSNL நிறுவனத்தைப் புத்தாக்கம் செய்ய பைப்லைன்கள் போடப்பட்டு வருவதாக மாறி  மாறி சொல்லப்படுகிறது.

டிலாய்ட் கமிட்டி தூக்கி நிறுத்தி விடும் என்று கனவு காண்கிறார்கள்.

ஆனால்...

அனேகம்மக எல்லா ஊர்களிலும் உள்ள முக்கியமான பகுதிகளில் பேட்டரி, பவர் பிளாண்ட், என்ஜின்  ஆகியவை மிக மோசமான நிலையில் உள்ளன. 
வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் விடும் நோயாளியின் நிலையைப் போல் அந்த முக்கியமான உபகரணங்கள் உள்ளன.

இந்த உபகரணங்களை மாற்றாமல் நல்ல சேவை என்பது சாத்தியமற்றது.
அதிகாரிகளையும், ஊழியர்களையும் குறை சொல்ல முடியாது.
ஏனெனில் காலாவதியாகி, காய்லான் கடைக்குப் போகவேண்டிய கருவிகளை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்ய முடியும்?

போர்க்கால அடிப்படையில் இவை மாற்றப்படா விட்ட்டால் சேவை சீரழியும்.

இதைச் சரிசெய்வதே புத்தாக்கத்துக்கு அடிப்படை.

செய்வார்களா?

Tuesday 16 June 2015

உழைப்பைப் பறி உழைப்பாளர்களைச் சிறையிலடை

தற்போதைய தொழிலாளர் சட்டச் சீர்திருத்தங்களும் தொழிலாளர்களின் உரிமைகளும் போராட்டங்களும் எதிர்கொண்டுள்ள சவால்களும்

யாருக்கு நல்லகாலம் பொறக்குது?

தொழிலாளர் சட்டச் “சீர்திருத்தங்கள்: தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் வேலையற்ற இளைஞர்கள் மீதும் புதிய தாராளவாதத்தின் தாக்குதல்

கடந்த 3-4 பத்தாண்டுகளில் நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் வேலையற்ற இளைஞர்கள் மீதும் ஆளும்வர்க்கத்தின் மிகப்பெரிய நேரடியான தாக்குதல் இப்போது வந்துள்ளது.  தற்போதைய மத்திய அரசு. பணக்காரர்களை மேலும் பண்க்காரர்கள் ஆக்குவது, உழைக்கும் மக்களுக்குக் கசப்பு மருந்தைக் கொடுப்பதுமே அந்தச் சீர்திருத்தங்களின்  தெளிவான நோக்கம் ஆகும்.

முதலாளிகளின் வளர்ச்சிக்கு எஞ்சியிருக்கும் அனைத்துத் தடைகளையும் அகற்றுகிற அதே வேளையில் உழைக்கும் மக்களின் வறுமை நிலையை அதிகரிக்கச் செய்துள்ளார்கள்.

2014 ஜூலை 31 அன்று, அரசாங்கம் அமைக்கப்பட்ட சில வாரங்களுக்குள், மத்திய அமைச்சரவை தொழிற்சாலைகள் சட்டம் 1948 இல் 54 சீர்திருத்தங்களையும்,  1961 ஆண்டு தொழில்பழகுனர் சட்டம்,  1988 ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டங்களில் (ஆண்டு அறிக்கை சமர்ப்பிப்பது, பதிவேடுகள் பராமரிப்பது ஆகிய்வற்றிலிருந்து சில வகை நிறுவனங்களுக்கு விலக்களித்தல்) மாற்றங்களையும் அனுமதித்தது. இவை நிறுவனங்கள் ‘தொழில் நடத்துவதை எளிமைப்படுத்துவதாகும்..  ராஜஸ்தான் அரசாங்கம் தொழிற்தகராறுச் சட்டம் 1947, ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் 1970 மற்றும் தொழிற்சாலைகள் சட்டம் 1948 ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டு வந்தது, அதை ஹரியானா
உத்தரப்பிரதேச அரசுகள் அதே போன்ற மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டு
வருகின்றன.

இந்த மாற்றங்களுக்கு என்ன தேவை வந்தது?

தொழிலாளர்களை ‘வேலைக்கு அமர்த்துவதையும் நீக்குவதையும் எளிதாக்கும் தொழிலாளர் கொள்கை.

தொழில்தகராறுச் சட்டம் 1947 இல் ராஜஸ்தான் அரசாங்கம் கொண்டுவந்துள்ள திருத்தங்களின்படி, 300 தொழிலாளர்கள் வரை எத்தனை தொழிலாளர்களை வேண்டுமானாலும் வேலையிலிருந்து நீக்குவதற்கு அரசாங்க அனுமதியைப் பெறவேண்டியதில்லை. முன்பு இது 100 தொழிலாளர்கள் வரை என்று இருந்தது. மத்திய அரசாங்கம்  இதை 1000 தொழிலாளர்கள் வரை உயர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளது, அதேபோல மலிவா கூலியில் பெணகளைச் சுரண்டுவதற்கு, அவர்கள் இரவு நேரங்களில் சமஅளவு ஊதியம், பாதுகாப்பான வேலைச் சூழல் இவற்றை உத்தரவாதப்படுத்தாமலேயே  வேலைக்கமர்த்தி முதலாளிக்கு அனுமதியளிக்கவும் திட்டமிட்டுள்ளது.

வேலைநேரமும் வேலைப்பளுவும் அதிகரித்தல்:

தொழிற்சாலைகள் சட்டம் 1948 இல் கொண்டுவரப்படும் மாற்றம், மிகுதிநேர உழைப்பை (ஓவர்டைம்) 50 மணி நேரத்திலிருந்து 100 மணிநேரமாக உயர்த்தியுள்ளது மேலும் தொடர்ச்சியாக மிகுதி நேர உழைப்புக்கான 7 நாள் வரையறை நீக்கப்பட்டு எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தொடர்ச்சியாக மிகுதிநேர உழைப்பை நிர்ப்பந்திக்கலாம். இது தொழிலாளர்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் என்பது மட்டுமின்றி, புதிய வேலைவாய்ப்புக்களைக் குறையச் செய்யும். 2004-05 இலிருந்து 2009-10 வரை முறைசார் தொழில்துறை வேலைவாய்ப்பு உருவாக்கம் 0.1% மட்டுமே, ஆனால் உற்பத்தித்திறன் 34% அதிகரித்துள்ளது. புதிய சட்டத் திருத்தங்கள் இந்தப்போக்கைப் பலப்படுத்தி முதலாளிகளின் இலாபத்தை அதிகரிக்கச் செய்யும்.

தொழிற்சங்கங்கள் அமைக்கும் உரிமை, கூட்டுப்பேர உரிமை ஆகியவற்றை பறிப்பது:

ஒரு தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதற்குக் குறைந்தபட்சமாக அது 15% தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று இருந்ததை 30% ஆக இராஜஸ்தான் அரசு உயர்த்தியுள்ளது ஒரு குறிப்பிட்ட அளவு ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு, தொழிற்சங்கம் அமைப்பது உடபட தொழிலாளர் சட்டங்களின் அனைத்து உரிமை விதிமுறைகளையும் இல்லாமல் செய்வது குறித்து மத்திய அரசாங்கம் திட்டமிடுகிறது. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப்பேர உரிமை ஆகியவை எவ்விதம் தொழிலாளர் நலத்துறை மற்றும் சட்ட நிறுவன்ங்கள் உதவியுடன் பறிக்கப்பட்டு வருகின்றன என்பதை மாருதி தொழிலாளர்கள் போராட்டத்தில் பார்த்து வருகிறோம்.

குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவான ஊதியத்தை நிர்ணயிப்பது, தொழில் பழகுனர்கள் மூலம் பாதுகாப்பாற்ற தொழிலாளர் படையை அதிகரிப்பது:

தொழில்பழகுனர் சட்டம் 1961 இல் கொண்டுவரப்படும் மாற்றங்களால் தொழில்பழகுனர் என்ற பெயரில் நிறுவனங்கள ஏராளமான தொழிலாளர்களை அமர்த்திக் கொள்ளலாம். பி.ஏ.,பி.காம் போன்ற தொழில்தொடர்பற்ற பட்டதாரிகளைக் கூட, தொழிற்சங்க உரிமைகள் இல்லாமல், நிரந்தரவேலை இல்லாமல், வேலைப்பாதுகாப்பு இல்லாமல், இஎஸ்ஐ-பிராவிடன்ட் பண்ட் இல்லாமல், தொழில்தகராறுச் சட்டப்படியான பாதுகாப்பு இல்லாமல் வேலையில் அமர்த்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தில் முதலாண்டு 70%  மூன்றாம் ஆண்டு 90% வரை வழங்கினால் போதும். தொழில்பழகுனர்களை அமர்த்திக்கொள்ள 500 புதிய தொழில்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பணத்திலிருந்து பெருங்குழுமங்களுக்கு மானியம் அளித்தல்:

தொழில்பழகுனர் சட்டம் 1961 இல் திருத்தங்கள், அடிப்படைத் தொழில்பயிற்சி பெறுனர்க்கு அளிக்கப்படவேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அளிக்கவேண்டிய கடப்பாடுகளை அகற்றுகின்றன. அந்த வசதிகளை அரசாங்கமே செய்யும், ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கும் குறைவான சுற்றுமுதலைக் கொண்டுள்ள நிறுவனங்கள் அனைத்திலும் முதலாண்டில் தொழில்பழகுனர்களின் பாதியளவு உதவித்தொகையை அரசாங்கமே வழங்கும்.

‘அமைப்புசார் தொழில்துறை அழிவு  தொழிலாளர் சட்டங்கள்
1988 அதிகபட்சம் 40 தொழிலாளர்கள் உள்ள (முன்பு இந்த எண்ணிக்கை 19 ஆக இருந்தது) நிறுவனங்கள், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், தொழில்தகராறுச் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம் உட்பட, 16 சட்டவிதிகளின் கண்காணிப்புக்கு (முன்பு இந்த எண்ணிக்கை 9 ஆக இருந்தது) விலக்களிக்கபட்டுள்ளன, அதன்மூலம் ஏராளமான தொழிலாளர்கள் அமைப்பாக்கப்பட்ட துறையின் சலுகைகளை இழப்பார்கள். ராஜஸ்தான் அரசு தொழிற்சாலைகள் சட்டத்தில் செய்த அண்மைக்கால மாற்றங்களில், மின்சக்தி பயன்படுத்தப்படும் நிறுவனங்களில் 10 தொழிலாளர்கள், மின்சக்தி பயன்படுத்தப்படாத நிறுவனங்களில் 20 தொழிலாளர்கள் என்று இருந்த வரையறை முறையே 20, 40 என்று மாற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு முதலாளிகளுக்கு ‘சட்டபூர்வ அனுமதி:

முன்பு தொழில்பழகுனர் சட்டம் 1961 படி அதை மீறுகிற முதலாளிக்கு ஆறுமாத சிறைத் தண்டனை என்று இருந்தது, இப்போது எந்த ஒரு சட்டமீறலுக்கும் அதிகபட்சம் ரூ.1000 அபராதம் மட்டுமே என்று மாற்றப்பட்டுள்ளது. அதன்படி சட்டத்தைப் பின்பற்றுவதை விட சட்டத்தை மீறுவது இலாபகரமானதாகும். முதலாளிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அவர்களைத் தொல்லைப்படுத்தக் கூடாது என்று தொழிற்சாலைகளை ஆய்வு செய்யும் நடைமுறை கட்டுப்படுத்தப்பட்டு, மேலதிகாரிகளின் அனுமதியின்றி ஆய்வுசெய்யச் செல்லக்கூடாது என்று ஆய்வாளர்கள் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.

அடிப்படையான உற்பத்தியில் ஒப்பந்தமுறையை சட்டபூர்வமாக்கல்: ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் 1970, ஒப்பந்தத்  தொழிலாளர்களுக்கான வசதிகள் பற்றிப் பேசுகிறது, அடிப்படை உற்பத்தி நடவடிக்கைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதைத் தடைசெய்கிறது. ஆனால் இப்போது ஆட்டோமொபைல், ஆடைத் தயாரிப்பிலிருந்து   ஏறத்தாழ எல்லா அடிப்படைத் தொழில்துறைகளிலும் தொடர்வண்டித்துறை வரை மலிவான, அமைப்புசாரா, பாதுகாப்பில்லாத ஒப்பந்தத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பது மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இப்போது அந்தச் சட்டத்தையே ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் 20 தொழிலாளர்களுக்கு மேலுள்ள நிறுவனங்களுக்கு செல்லாது என்று இருந்ததை 50 தொழிலாளர்களுக்கு மேலுள்ள நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று இராஜஸ்தான் அரசு திருத்துகிறது. மத்திய அரசாங்கமோ சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தேசிய முதலீட்டு மற்றும் உற்பத்தி மண்டலங்கள், தொழில்துறைப்பகுதிகள் ஆகியவற்றுக்கு அந்தச்சட்டம் பொருந்தாது என்று அறிவிக்க விரும்புகிறது.

தொழிலாளர்கள் மீதான ஆளும் வர்க்கங்களின் மிகப்பெரிய நேரடித் தாக்குதல் ஒட்டுமொத்தமாக உழைக்கும் மக்களின் உண்மையான ஊதியத்தைக் குறைத்து, அவர்களுடைய வேலைகளை மேலும் பாதுகாப்பற்றதாகச் செய்து, அதன்மூலம் அவர்களுடைய அடிப்படைத் தேவையான உணவு, உடல்நலம், கல்வி ஆகியவற்றைப் பெறுவதையே மோசமாகப் பாதிக்கச் செய்வதாகும். முதன்மையாக ஒப்பந்தத் தொழிலாளர்களையும், தினக் கூலிகளையும், இப்போது குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக் ஊதியம் பெறும் தொழில்பழகுனர்களையும் கொண்டுள்ள  அமைப்பாகப்பட்ட தொழில்துறை நிலைமையே இப்படி, என்றால் அமைப்புசாராத் தொழில்களில் உள்ள கோடிகணக்கான தொழிலாளர்களின் நிலை இன்னும் மோசமான பாதிப்புக்குள்ளாகும் என்பது உறுதி.

அமைப்புசாராத் தொழிலில் தொழிற்சங்க இயக்கமே இல்லாத நிலையில், அமைப்பாக்கப்பட்ட தொழில்துறையில், உற்பத்தியைத் தனித்தனியாகப் பிரித்து, பல சிறு அலகுகளில் நடத்துவது., உற்பத்தியை நாடு கடந்து மேற்கொள்வது, எல்லைகடந்த மூலதன முதலீடு அதிகரிப்பு, அடிப்படை உற்பத்தித்துறையை   அமைப்புசாரா முறைக்கும், ஒப்பந்தமுறைக்கும் மாற்றுவது போன்ற நடவடிக்கைகளால் தொழிற்சங்க இயக்கம், கடந்த சில பத்தாண்டுகளாகக் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இப்போது இந்தத் தொழிலாளர் சட்ட ‘சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம், தொழில்தகராறு சட்டம் 1947, தொழிற்சங்கச் சட்டம் 1926, தொழிற்சாலைகள் சட்டம் 1948, ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் 1970, குறைந்தபட்ச ஊதியச் சட்டம் மற்றும் இன்னபிற சட்டங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த உரிமைகளும் வசதிகளும் பறிக்கப்படும் நிலை தொழிற்சங்க இயக்கத்திற்குப் பெருத்த அடியாக இருக்கும். ஏனென்றால் இந்த உரிமைகளுக்காவும் வசதிகளுக்காகவும் தொழிற்சங்கம் எண்ணிறந்த போராட்டங்கள் மூலமும் உயிர்த்தியாகங்கள் மூலமும் கொடுத்த விலை மிகவும் அளப்பரியதாகும்.

இந்தியாவின் வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கம் முதன்மையாக அமைப்புசாராததாக, ஒப்பந்தவேலையாக, குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவான ஊதியமளிப்பதாக, பாதுகாப்பற்றதாக  இருக்கும் என்பதையே இந்த முயற்சிகள் தெளிவாகக் காட்டுகின்றன, ‘திறன்மிக்க இந்தியா, ‘இந்தியாவில் தயாரிப்பீர்,  ‘வளர்ச்சி போன்ற போலியான பிரச்சாரத்திலிருந்து, பரந்துபட்ட மக்களுக்கு கசிந்து ‘வரப்போவது நல்லகாலமல்ல ஒரு இருண்ட எதிர்காலமே என்பது தெளிவாகிறது. வேலைக்காக காத்திருக்கும் மாணவர்கள், இளைஞர்களுக்கு, குறிப்பாக, உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து வருவோருக்கு அடுத்த 4-5 ஆண்டுகளில் கடுமையான அதிர்ச்சி காத்திருக்கிறது; நிலையான வேலை என்பது இனி எப்போதும் இல்லை. நமது நிலைக்கு நமது ‘தனிப்பட்ட தவறு தான் காரணம் என்று நம்பச் செய்யப்படுகிறது, ஆனால் ‘வரும் நல்ல காலத்தில் அடிமை உழைப்பு நிலையில், பயனேதுமின்றிக் கடுமையான உழைப்பில் உழன்று கிடப்பது பெரும்பான்மை மக்களின் தலையில் ஆளும்வர்க்கங்கள் எழுதிவரும் தலையெழுத்தாகும்.

இதை எப்படி மாற்றப்போகிறோம்?

தொழிலாளர் சட்டங்கள் என்பவை ஆளும்வர்க்க நலன்களின் நெருக்கடியான முரண்பாடு மற்றும் வர்க்கப் போராட்டத்தின் பிரதிபலிப்பே தவிர வேறல்ல. வரலாற்று ரீதியாக, தொழிலாளர்கள் தமது தீவிரமான  போராட்டங்கள் மூலம் பெற்றுப் பாதுகாத்து வருபவைதாம் தொழிலாளர் சட்டங்கள். இன்று நாம் எதிர்கொண்டுள்ள இந்தச் சவால்களுக்கிடையில், போர்க்குணமிக்க போராட்டத்திற்கும் எதிர்ப்புக்குமான தேவைகள் தேவைகளும் சாத்தியங்களும் அதிகரித்து வருகின்றன. கத்வடைப்புக்கள், வேலைநீக்கங்கள் மூலம் தொழிற்சங்க உரிமைகள மீது முதலாளிகள் பயங்கரமான தாக்குதல்களை நடத்திவரும் அதேவேளையில், தொழிலாளர்களின் போராட்டங்களையும் பார்த்துவருகிறோம். எடுத்துக்காட்டாக, கர்கொவான்-மானேசர்-பவால்  தொழில்துறைப் பகுதியில் 2014 இல் மட்டும் 30 வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன, மேலும் அவற்றில் தொடர்ச்சியாக பல மாதங்களாக நடந்துவருகின்றன. செய்தி ஊடகங்கள் வெளியிடாவிட்டாலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பேக்ஸ்டர் தொழிலாளர்களுக்குத் தங்கள் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில், 2014 ஆகஸ்டு 12 அன்று கர்கொவான்-மானேசர் பகுதியில் 15 தொழிற்சாலைகளில் 20,000 தொழிலாளர்கள் ‘சட்டவிரோத ஒற்றுமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் என்பதை நாம் அறிவோம். மானேசரில் மாருதி சுசுகியிலிருந்து பிவாடியில் சிரிராம் பிஸ்டன் வரை ‘சட்டவிரோத வேலைநிறுத்தம், மிதமான உற்பத்தி, ஆகியவற்றுடன், ‘சட்டபூர்வத் தொழிற்சங்க அமைப்புக்களுக்கு அப்பால் நிரந்தர-தினக்கூலி-ஒப்பந்த-தொழில்பழகுனர் தொழிலாளர்கள் ஒற்றுமை விரிவடைந்து வருவதைக் காண்கிறோம். தொடங்கியுள்ள இந்தப் புதிய வடிவங்கள் வட்டார மட்டங்களைத் தாண்டிச் செல்லவேண்டியிருக்கிறது,  அமைப்பாக்கப்பட்ட தொழில்துறைகளில் உள்ள ஒப்பந்த-தினக்கூலித் தொழிலாளர்கள் அவர்களுடைய முழு வலிமையோடும் அமைப்பாக்கப்பட வேண்டியுள்ளது, மிகப்பெரிய அமைப்புசாராத் தொழில்துறை எந்த வகையிலாவது அமைப்பாகி அதன் காலில் எழுந்து நிற்க வேண்டியுள்ளது,  தொழிலாளர் வர்க்கம் அதன் அரசியல் நலன் மற்றும் போராட்டத்துடன் விழித்தெழ வேண்டியுள்ளது, ஆனால் தொழிற்சாலை மட்டத்திலும், பகுதி அளவிலும், துணிச்சல் மிக்க தொழிலாளர்கள் போராட்டங்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை உயிரோட்டத்துடன் வைத்திருக்கின்றன.



ஏழைகள் மீது ஏறும் சுமை


இந்தியா முழுவதற்கும் ஒரே சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற சீர்திருத்தம் பற்றி 10 ஆண்டு களாகப் பேசிவருகிறோம். ஏற்கெனவே, இந்திய மாநிலங்களில் அமலாகிவரும் மதிப்புக் கூட்டப்பட்ட வரி(வாட்) முறைதான் இது. ஆனால், இன்னமும் விரிவானது. வாட் என்பது விற்பனை வரிக்குப் பதிலாக, சரக்குகள் மீது மட்டும் விதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி-யோ சரக்கு, சேவை இரண்டின் மீதும் விதிக்கப்படுவது.
இப்போதுள்ள வரி நிர்வாகத்தில் சரக்குகள் மீது மட்டும் மாநிலங்கள் விற்பனை வரி விதிக்கின்றன, சேவைகள் மீது அல்ல. மத்திய அரசு உற்பத்திப் பொருட்கள் மீதும் சேவைகள் மீதும் வரி விதிக்கிறது, மொத்த வர்த்தகம், சில்லறை வர்த்தகம் மீது அல்ல. சரக்கு, சேவை வரியானது (ஜி.எஸ்.டி.) இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஒரே விதமான வரி விதிப்பை உறுதி செய்யும். எல்லா பகுதிகளிலும் எல்லா சரக்குகள், சேவைகள் மீதும் வரி விதிப்பை விரிவுபடுத்தும். மத்திய அரசும் மாநில அரசுகளும் சரக்குகள், சேவைகள் மீது வரிவிதிக்க அதிகாரம் வழங்குவதற்காகத்தான் அரசியல் சட்டத்தில் திருத்தம் தேவைப்படுகிறது.
பாதிக்கப்படும் நிதி நிர்வாகம்
20 ஆண்டுகளுக்கு முன்னால் மதிப்புக் கூட்டப்பட்ட வரிக்கு (வாட்) ஆதரவாக என்ன வாதங்கள் முன்வைக்கப்பட்டனவோ அதே வாதங்கள்தான் சரக்கு, சேவை வரிக்கு ஆதரவாகவும் வைக்கப்படுகின்றன. சரக்கு, சேவை வரியானது எல்லாவிதமான மறைமுக வரிகளையும் தனக்குள்ளே அடக்கிவிடுகிறது. வரி நிர்வாகத்தை எளிமைப்படுத்துகிறது. வரி செலுத்தப்படுவதை உறுதி செய்கிறது. உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகிய மூன்று கட்டங்களிலும் எந்தவித சேதத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் இடுபொருட்கள் மீது விதிக்கப்படும் வரியைக் கணக்கிட்டு, இறுதி நுகர்வோர் மட்டும் வரியைச் செலுத்த வேண்டியிருப்பதால் வரிச்சுமை கூடிக்கொண்டே போகாமல் தடுக்கப்படுகிறது. இதனால் உற்பத்திச் செலவு குறைகிறது. ஏற்றுமதிக்குப் போட்டி போட முடிகிறது. சரக்கு, சேவை வரி பொதுவாக அமல்படுத்தப்படுவதால் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பே 2% உயர்ந்துவிடும் என்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. இது சரியா என்று காலம்தான் சொல்ல வேண்டும். ஆனால், மாநிலங்களின் நிதி நிர்வாகமும் சுயாட்சித் தன்மையும் நிச்சயம் பாதிக்கப்படும்.
மாநிலங்களுக்கு இழப்பு?
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பொது சரக்கு, சேவை வரி மசோதா, அரசியல் சட்டத்தின் 122-வது திருத்த மசோதா 2014 என்று அழைக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளுக்குப் பொதுவாக ஒரே சரக்கு, சேவை வரி இல்லை, இரண்டு விதமாக உள்ளது. மத்திய அரசு நிர்வகிக்கப்போவது மத்திய சரக்கு, சேவை வரி (சி.ஜி.எஸ்.டி.) என்றும் மாநிலங்களால் நிர்வகிக்கப்படப்போவது மாநில சரக்கு, சேவை வரி (எஸ்.ஜி.எஸ்.டி.) என்றும் அழைக்கப்படும். இதன் கண்காணிப்பு, நிர்வாகமும் இருவேறு நிலைகளில் இருக்கும். இந்த வரி விகிதத்தை சரக்கு, சேவை வரி கவுன்சில் என்ற அமைப்பு நிர்ணயிக்கும். இதன் தலைவராக மத்திய நிதி அமைச்சர் இருப்பார். மாநிலங்களின் நிதி, வருவாய்த் துறை அமைச்சர்கள் இதன் உறுப்பினர்கள். இந்த கவுன்சில் வரி விகிதத்தை நிர்ணயித்த பிறகு, மாநிலங்கள் அதை கூட்டவோ குறைக்கவோ முடியாது. அதே வேளையில், இந்த வரி விகிதங்களை மாநிலங்களின் தேவைக்கேற்ப திருத்த வரி விகிதங்களில் குறைந்தபட்சம் - அதிகபட்சம் என்ற அளவு நிர்ணயிக்கப்படும். இவ்விரு வரம்புக்குள் ஏதேனும் ஒரு விகிதத்தில் மாநிலங்களில் வசூலித்துக் கொள்ளலாம்.
சமூக பரிமாணம்
சரக்கு, சேவை வரியானது எல்லா சரக்குகளுக்கும் சேவைகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதுடன் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். உற்பத்தி வரி என்பது உற்பத்தியாளர்கள் மீது விதிக்கப்படுவது. சரக்கு, சேவை வரியோ நுகர்வோரால் செலுத்தப்படுவது. சரக்கையோ சேவையையோ அளிப்பவர் ஏற்கெனவே செலுத்திய வரியைக் கழித்துக்கொண்டுதான் இந்த வரியைச் செலுத்துவார். இன்னொரு வகையில் சொல்வதென்றால் சரக்கு, சேவை வரி என்ற மறைமுக வரியானது எல்லா வகை நுகர்வுக்கும் ஒரே சீரான விகிதத்தை உறுதி செய்யும். இப்போது அமலில் இருக்கும் வெவ்வேறு வரி விகிதங்கள், சலுகைகள், விலக்குகள் போன்றவற்றுக்கு இடமே இருக்காது.
சரக்கு, சேவை வரி முறையைத் தேர்ந்தெடுத்த பல நாடுகள் அத்தியாவசியப் பண்டங்களை இந்த வரியிலிருந்து விலக்கிவைத்துள்ளன. சிலவகைப் பண்டங்கள் மீது மிகக் குறைவான பொது வரியையே விதித்துவருகின்றன. விலக்குகள் மிகக் குறைவாகவோ அல்லது அறவே இல்லாமலோ இருப்பதுதான் பொது சரக்கு, சேவை வரி முறைக்கு நல்லது.
எது லட்சிய வரி விகிதம்?
சரக்கு, சேவை வரி பொதுவென்றால் எத்தனை சதவீதமாக அது இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. 13-வது நிதிக்குழுவுக்காக நியமித்த பணிக்குழுவானது அது 12% ஆக இருக்க வேண்டும். இதில் மாநிலங்களின் பொது சரக்கு, சேவை வரியாக 7%-ம், மத்திய அரசின் பொது சரக்கு சேவை வரியாக 5%-ம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. 2014-ல் மாநில அரசின் பிரதிநிதிகள் இது 27% ஆக இருக்க வேண்டும் என்று கோரினர். இவ்விரண்டுமே சரியில்லை. 12% தான் வரி என்றால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு நிச்சயம். மதிப்புக் கூட்டப்பட்ட வரி விகிதம் 13% முதல் 14% ஆக இருக்கும்போது, 12% என்பது வருவாயைக் குறைத்துவிடும். 27% என்று விதித்தால் ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பெரும் சுமையாகிவிடும். இந்த அளவு 27%-க்கும் குறைவாகத்தான் இருக்கும் என்று ஜேட்லி உறுதியளித்திருக்கிறார்.
மறைமுக வரிக்கு முக்கியத்துவம்
உலகம் முழுவதுமே இப்போது அரசுகள் வரி விகிதத்தை உயர்த்தவோ, புதிய வரிகளை விதிக்கவோ அஞ்சுகின்றன. நேர்முக வரிகளைக் குறைத்துவிட்டு மறைமுக வரிகளை அதிகப்படுத்துகின்றன. வசதி படைத்த பணக்காரர்கள் அதிக பாரம் சுமக்க வேண்டும் என்ற காலம் மலையேறி, எல்லாச் சுமைகளையும் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மீது சுமத்துவதே வழக்கமாகிக்கொண்டிருக்கிறது. பெரிய நிறுவனங்கள் மீதான வரியை உயர்த்தினால் அவை முதலீட்டை விலக்கிக்கொண்டு வேறு நாடுகளுக்குப் போய்விடும், அதனால் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு அத்தனையும் குறைந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.

2013-ல் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி இந்திய அரசின் மொத்த வரி வருவாயில் நேர்முக வரிகள் மூலம் கிடைக்கும் பங்கு 37.7% தான். தென்னாப்பிரிக்காவில் இது 57.5% ஆகவும் இந்தோனேசியாவில் 55.85% ஆகவும் இருக்கிறது. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தால் மறைமுக வரி விகிதம் இந்தியாவில் மேலும் அதிகரித்துவிடும்.